ஐயங்கார் முருங்கைக்காய் சாம்பார்

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

தென்னிந்திய உணவுகளில் சாம்பார் மிகவும் பிரபலமானது. இத்தகைய சாம்பாரிலேயே பல ஸ்டைல்கள் உள்ளன. இப்போது அதில் ஒன்றாக ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சாம்பார் செய்வது மிகவும் ஈஸி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பாரின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
மைசூர் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 6-7
முருங்கைக்காய் - 1
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3-4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்து பருப்புக்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும், அதில் முருங்கைக்காய், உப்பு, சர்க்கரை, புளிச்சாறு, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, 20-25 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி!!!