10 கட்டளைகள் வயிறு

10 கட்டளைகள் வயிறு

பற்களால்கூட கூழாக்க முடியாத உணவை, இரைப்பை அரைத்துவிடும். இரைப்பையில் உணவு செரிக்க, மூன்று மணி நேரம் பிடிக்கும். சாப்பிடும்போது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் இரைப்பை, சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை சுருக்கி விரியும். இதனால், வயிற்றில் வலி, பசி மயக்கம், சோர்வு ஏற்படும். உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.

பசிக்காமல்போனால், உண்ட உணவு சரியாகச் செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம். அதிக உடல் எடை, இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவது, செரிமானம் இன்மைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உணவுத் துணுக்குகள் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்கு ஜீரணமாக உதவுவதால், உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கடின உணவைத் தவிர்த்து, மிருதுவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

காரம் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் என்று, அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ, எதற்கெடுத்தாலும் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் அல்சர் வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இன்றி, வலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. சிவப்பு மிளகாய் பயன்படுத்துவதை, முடிந்தவரை தவிர்க்கவும்.

நார்ச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி, வாழை போன்ற பழங்களைத் தினமும் சாப்பிடுவதும், கீரை சேர்த்துக்கொள்வதும், போதுமான அளவு நீர் அருந்துவதும், மலச்சிக்கலில் இருந்து தப்பிக்க உதவும்.

செரிமானம் இன்மை, பசி இன்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு போன்ற காரணங்களால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். மேலும், ஹைப்போதைராய்டு, அதிக அளவு கொழுப்பு, அளவுக்கு அதிகமான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும் வயிறு வீங்கலாம். வயிற்றில் இருப்பது காற்றா, நீரா என்பதை, அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்துபார்த்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

அதிக அளவு கொழுப்பு, வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும்போது, தொப்பை விழுகிறது. இதனால், உடல்பருமன் அதிகரித்து, சர்க்கரை நோய், இதயநோய்க்கு வழிவகுக்கும். முறையான பயிற்சி, நார்ச்சத்து, அதிகம் கொழுப்பு இல்லாத உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.

பெண்களுக்கு, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, வயிற்றில் வரிகள் (Stretch marks) ஏற்படும். வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்ததும், தசைகள் சுருங்குவதால் இந்த வரிகள் ஏற்படுகின்றன. வயிற்றுத் தசைகளை இறுக்கும் பயிற்சிகள், நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், இந்த வரிகளைப் போக்கலாம்.

உணவு அலர்ஜி ஏற்பட்டாலும் வாந்தி வரலாம். வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்துகள் இருக்கின்றன. வாந்தி வரும்போது, அதைத் தடுப்பதைவிட, எடுத்துவிடுவதே நல்லது. அதிக அமிலங்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுதான் வயிற்றுப்போக்கு. இதனால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க முடியாமல் போகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. வயிற்றுப்போக்குக்கான காரணத்தை சரிசெய்வதுடன், சத்தான உணவு, சுத்தமான தண்ணீர், திரவ உணவுகள் எடுத்துக்கொள்வதன்
மூலம், இழந்த சத்தை மீட்கலாம்.

வயிற்றில் அதிகக் காற்று சேருவதற்கு, வாய் வழியாகக் காற்றை விழுங்குவதுதான் காரணம். நிதானமாகச் சாப்பிடுவது, மெதுவாகத் தண்ணீர் குடிப்பது, மூன்று வேளைக்குப் பதில், ஐந்து வேளையாக உணவைப் பிரித்து உண்பது போன்ற பழக்கங்களால் இதனைத் தவிர்க்கலாம். பாட்டில் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டதும் அரை கிலோமீட்டர் மெதுவாக நடப்பது நல்லது.