முட்டைக்கோஸ் சட்னி

முட்டைக்கோஸ் சட்னி

பொதுவாக முட்டைக்கோஸ் கொண்டு பொரியல், கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம், முட்டைக்கோஸ் சட்னியானது தோசை, இட்லி போன்றவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது காலை வேளையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். சரி, இப்போது அந்த முட்டைக்கோஸ் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைக்கோஸ் சட்னி ரெடி!!!