சேப்பங்கிழங்கு ப்ரை

சேப்பங்கிழங்கு ப்ரை

எப்போதும் உருளைக்கிழங்கு ப்ரை செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சேப்பங்கிழங்கு கொண்டு ப்ரை செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிடுங்கள். மேலும் சேப்பங்கிழங்கில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதனால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியுடன் இருக்கும். சரி, இப்போது அந்த சேப்பங்கிழங்கு ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, ருசி எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 10
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் சேப்பங்கிழங்கை நீரில் மண் முழுவதும் நீங்க நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சேப்பங்கிழங்கை போட்டு, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கி, தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். பின்பு அதில் உப்பு தூவி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி!!!