திணை பாயாசம்

திணை பாயாசம்

தானியங்களுள் ஒன்று தான் திணை. இத்தகைய திணையை பலர் உப்புமா செய்து தான் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் அந்த திணையைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இங்கு அந்த திணை பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

திணை - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/2 கப்
நெய் - 1 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், திணையை சேர்த்து பொன்னிறமாகவும், நன்கு மணம் வரும் வரை வறுத்து, பின் அதில் நீரை ஊற்றி, மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி கரண்டி பயன்படுத்தி வெல்லத்தை கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். நீரானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வேக வைத்துள்ள திணையை சேர்த்து கட்டி சேராதவாறு 3 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் பொடி, பால் சேர்த்து கிளறி, பின் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், திணை பாயாசம் ரெடி!!!